ஆச்சரியமான தேவ அன்பு

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.- (1 யோவான் 3:16).

இங்கிலாந்து நாட்டின் போதகர் ஜோசப் பார்க்கரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 'இயேசுகிறிஸ்து யூதாஸ் காரியோத்தை ஏன் தமது சீஷராக தெரிந்துக் கொண்டார்? அவருக்கு தெரியுமே அவன் அவரை காட்டிக் கொடுப்பான் என்று' என்பதுதான் அந்தக் கேள்வி. போதகர் ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். ஆனால் பதிலைக் கூட முடியவில்லை. அந்தக் கேள்வி அவரை திணறடித்துவிட்டது. ஆனால் அதே கேள்வி அவருக்கு மற்றொரு கேள்வியை உருவாக்கியது. அதுவும் அவரை திணறடித்தது, அந்தக் கேள்வி, 'தேவன் ஏன் என்னை தெரிந்துக் கொண்டார்?' என்பதே.

ஒரு சிலருடைய நடவடிக்கைகளை பார்க்கும்போது நம் இருதயத்தில் மிகவும் துக்கப்படுகிறோம். கிறிஸ்தவர்கள் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி ஒழுங்கீனமாய் வாழ்கிறார்களே? அவர்களையெல்லாம் எப்படி தேவன் தெரிந்துக் கொண்டார் என்று அங்கலாய்க்கிறோம். ஆனால் உண்மையில் சொல்லப் போனால், மற்றவர்களை குற்றப்படுத்தி பார்க்கிற கண்ணோட்டத்தினால் தான் நாம் அவ்வாறு நினைக்கிறோம் என்பதை நாம் உணருகிறதில்லை. இதைத்தான் பிரபல சுவிஷேசகராகிய பில்லிகிரகாம் அவர்கள் கூறும்போது. 'மீட்கப்பட்ட எந்தவொரு பாவியும் பிறரைப் பார்த்து பாவி என்று சொல்ல எந்தவொரு நியாயமுமில்லை' என்று சொல்கிறார்.

நாம் காண்கின்ற மனிதர்கள் எல்லாரும் தேவ சாயலில் பூரணப்பட்டவர்கள் கிடையாது என்பதை நாம் முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். நம்மைப் போல் அவர்களும் தேவ சாயலில் முழுமைப் பெற தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களே! இதில் சிலர் தேவகிருபையில், பெலத்தில், சீராக வாழ முடிகிறது. சிலரோ குறைவுள்ளவர்களாய், பெலவீனர்களாய் காணப்படுகிறார்கள். 'அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்' (ரோமர் 15:1-2) என்று வசனம் கூறுகிறது. ஆம், அப்படிப்பட்ட பெலவீனமுள்ளவர்களை நாம் நியாயந்தீர்க்காமல், அவர்களை தாங்க வேண்டும், அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என் கிறிஸ்து நம்மிடம் எதிர்ப்பார்க்கிறார்.

ஜோசப் பார்க்கரிடம் கேட்கப்பட்ட அதே கேள்வி இன்று நம்மிடம் கேட்கப்பட்டால், நாம் என்ன பதில் சொல்வோம்? பாவத்தில் வாழும் மனிதர்களை மீட்கும்படி, இரட்சிக்கும்படி தேவ அன்பு வெளிப்பட்டதே! அந்த அன்பு பாவியாகிய என்னை சந்தித்ததே! அதேப் போல மற்றவர்களையும் பெலவீனர்களையும் சந்திக்கக்கூடாது? தேவன் தகுதியற்ற நம்மிடத்தில் காண்பிக்கின்ற அவருடைய ஆச்சரியமான அன்பிற்காக அவரை துதிப்போமா?

பெலவீனமுள்ளவர்களும், நான் பெலவீனன், என்னால் பரிசுத்தமாக வாழ முடியாது, என்னால் கர்த்தர் விரும்புகிற தரத்திற்கு உயரமுடியாது என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டிராமல், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும் (பிலிப்பியர் 2:12).

தேவன் ஒவ்வொருவருக்கும் சுயசித்தத்தை கொடுத்திருக்கிறார். தேவனே எல்லாவற்றையும் நமக்காக செய்வாரென்றால் அவர் நீதியுள்ள தேவன் என்று யாராலும் கூற முடியாது. நம்முடைய சித்தத்திற்கு அவர் நம்மை விட்டுக் கொடுப்பதால்தான் அவர் நீதியுள்ள தேவன் என்றுக் கூறப்படுகிறார். அப்படி அவர் செய்யாதிருந்தால் பிசாசானவன் வந்திருக்கவே முடியாதே அல்லது யூதாஸ் காரியோத் வந்திருக்கவே முடியாதே! அவர் மனிதருக்கு மட்டுமல்ல, தூதருக்கும் சுயமாய் முடிவெடுக்கும் தன்மையை கொடுத்திருப்பதினால்தான், லூசிபர் அந்த நாளில் பாவம் செய்து கீழே தள்ளப்பட்டான்.

இன்றும் தேவன் யாரையும் வற்புறுத்தி தம்மை ஏற்றுக் கொள்ள செய்கிறவரல்ல. ஒவ்வொருவரும் தங்கள் சுய சித்தத்தை பயன்படுத்தி, அவருடைய அன்பை நினைத்து அவரை ஏற்றுக் கொள்ளவே அவர் அனுமதிக்கிறார். ஆவியில் பெலவீனமானவர்களை ஏற்றுக் கொள்வோம், அவர்களை தாங்குவோம், அவர்களை சேர்த்துக் கொள்வோம், அவர்கள் பலப்பட உதவி செய்வோம். 

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post