இடைவிடாத ஜெபம்

பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.” – சங்கீதம் 19:2 

கையில் பென்சிலோடு என்னுடைய எழுத்து வேலையைச் செய்ய உட்கார்ந்தேன். முதலிலேயே பேனாவினால் எழுதினால் திருத்தங்கள் செய்வது கஷ்டம் என்பதால் பென்சிலே எனக்கு உதவியாயிருந்தது. எழுதுவேன், அழிப்பேன், அதின் தலையை திருகுவேன், இறுதியில் நேர்த்தியாய் அந்த வேலையை செய்துமுடிப்பேன். அப்போது ஆண்டவர் அந்த பென்சில் மூலம் என்னோடு இடைப்பட்டார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பென்சிலின் வெளிப்புறம் அழகாக இருந்தாலும் அதனுள்ளே இருக்கும் “கிராபைட்” தான் முக்கியம். நாமும் உலகின் பார்வைக்கு பலவிதமாக நம்மை அலங்கரித்துக்கொண்டாலும் நமக்குள்ளே இருக்கும் ஆண்டவராலே நாம் மேன்மை பெறுகிறோம். அவரில்லாத வாழ்வு உபயோகமற்ற, வெறுமையான வாழ்வாகத்தான் இருக்கும். உங்களுக்குள் கிறிஸ்து வாழ்கிறாரா? 

பென்சில், தன்னை கையில் வைத்திருப்பவரின் எண்ணத்தையும் விருப்பத்தையும் வெளிப்படுத்தி தன்னைக் கரைத்து, பேப்பரில் தனது முத்திரையைப் பதிக்கிறது. அதுபோல நாம் வாழ்வதும் ஒரு வாழ்க்கைதான். ஆண்டவர் நம்மைப் படைத்து, தன் கரத்தில் எடுத்ததற்கு ஒரு நோக்கமுண்டு. அதை உணர்ந்தவர்களாக அவரது விருப்பத்தை நிறைவேற்றி நம் வாழ்க்கை மூலம் இவ்வுலகிற்கு ஆண்டவர் சொல்ல நினைக்கும் அனைத்தையும் செய்துமுடித்தவர்களாய் காணப்படவேண்டும். கிறிஸ்துவின் பணிக்கென்று நம்மை கரைய ஒப்புக்கொடுக்கும்போது பிறருக்கு பயன்படுவது உறுதி. நீங்கள் கரைய ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவரா?

பென்சிலின் கூர்மை மழுங்கும்போது அதை கூர்மையாக்கிய பின்பே மீண்டும் பயன்படுத்துகிறோம். நம் ஆவிக்குரிய காரியங்களையும் இவ்வுலகக் காரியங்கள் மழுங்கடித்துக்கொண்டேதான் இருக்கும். தொழிலாளி தன் கையிலுள்ள ஆயுதத்தை கூர்மையாக்கிக்கொண்டே இருப்பதைப்போல நாமும் அனுதினமும் கூர்மையாகிக்கொண்டே இருக்கவேண்டும். நம்மை கூர்மைப்படுத்துவது வேதவாசிப்பும் ஜெபமுமே! இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை தரிசனமற்ற வாழ்வாகவே இருக்கும்! நீங்கள் கூர்மையாக்கப்பட்டவரா? 

பிரியமானவர்களே! நாம் கற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தால், எதன் மூலமும் எந்த நேரமும் தேவன் நம்முடன் பேச முடியும். சமையலறையே சகலமும் என வாழ்ந்த தாயார் கூறிய காரியங்கள் என் நினைவுக்கு வருகின்றன. “அடுப்பில் பால் பொங்கும்போது, ஆண்டவரே என் உள்ளமும் உம் அன்பால் இப்படி பொங்கவேண்டும் என்றும், வீட்டை பெருக்கும்போது நேற்று பெருக்கின வீடு இன்று அழுக்காகுவது போல என் இருதயமும் அழுக்காகிவிட்டது ஆண்டவரே, உம் இரத்தத்தால் என்னை மீண்டும் கழுவும்” என்பார்களாம். ஆம், நாமும் இடைவிடாமல் ஜெபிப்போம், இறுதிவரை கற்றுக்கொள்வோம்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post