நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்

“நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்;…” - நீதி.14:2

மிகவும் நெரிசலான சாலையில் தனது 10 வயது மகனுடன் காரை ஓட்டிக் கொண்டு போனார் ஒருவர். போகிற வழியில் குறுக்கேயும், நெடுக்கேயும் கண் மூடித்தனமாக தங்களது வாகனங்களை ஓட்டியவர்களைப் பார்த்து இவர் எரிச்சலடைந்து அடிக்கடி Fool, Idiot (முட்டாள், அறிவுகெட்டவன்) என்று திட்டிக் கொண்டே கார் ஓட்டினார். இதை அருகில் இருந்த 10 வயது மகன் கவனித்து கொண்டே வந்தான்.

அடுத்த நாள் அந்த காரை அதே ரோட்டில் அதே நெரிசலில் அவனது அம்மா ஓட்டினார்கள். ஆனால் அம்மா வாயிலிருந்து Fool, Idiot என்ற வார்த்தை ஒரு தடவை கூட வரவேயில்லை. பொறுமையாக நிதானமாக ஓட்டி விட்டு வீடு திரும்பினார்கள். இதைக் கண்ட 10 வயது பையனுக்கு ஆச்சரியம், தன் அம்மாவை பார்த்து, “அம்மா, நேற்று அப்பா ஓட்டியபோது 9 முட்டாள்களைப் பார்த்தேன். அந்த 9 அறிவுகெட்டவர்களும் இன்றைக்கு எங்கே போனார்கள்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

இந்த கேள்விக்கு உங்களால் பதில் கூற முடியும் என நினைக்கிறேன். இன்றைய செய்தியின் மூலம் நிதானத்தைப் பற்றி நம்முடன் பேச கர்த்தர் விரும்புகிறார். இன்றைய உலகம் மிக துரிதமாக அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கும் அவசரம், எதிலும் அவசரம், என்று ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் கலந்து விட்ட நாமும் நிதானத்தை இழந்து தாறுமாறாகவே ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிதானமின்றி பதற்றத்தோடும், கட்டுப்பாட்டை இழந்தவர்களாயும் நாம் வாழ்கிறதை தேவன் விரும்பமாட்டார். (நீதி.29:20)

உங்களது உரிமைகள் பறிக்கப்படும்பொழுதோ, உங்களது நியாயமான செயல்கள் புரட்டப்பட்டு தவறாக கூறப்படும்பொழுதோ, உங்களது கருத்துக்கள் ஏற்க மறுக்கப்படும்பொழுதோ நீங்கள் அதினால் உடனே ஆத்திரப்படுவது நல்லதல்ல. “மூடனுடைய நெஞ்சில் கோபம் குடி கொள்ளும்” என்று ஞானி கூறுகிறார். அதற்கு மாறாக சற்று பொறுமையுடன் நிதானம் என்ற சுபாவத்தை தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

கர்த்தராகிய இயேசுவின் ஊழிய நாட்களில் அவரையும், அவருடைய ஊழிய முறையையும் மிகவும் மோசமாக விமர்சனம் பண்ணினவர்கள் ஏராளம். குறிப்பாக பரிசேயர்கள் கூறும்போது “பிசாசுகளின் உதவியால்தான் இவர் மக்களை குணமாக்குகிறார்” என கடினமான வார்த்தையால் இயேசுவை அவருடைய முகத்திற்கு முன்பாக நேரிடையாகவே குறை கூறினார்கள். இதைக் கேட்ட நம் கர்த்தராகிய இயேசுவோ பதற்றப்படாமல் நிதானமாக அவர்களுக்கு பதில் கூற முடிந்தது. (மத்தேயு 12:22-32)

ஆகவேதான் யாக்கோபு கூறும்போது, “என் பிரியமான சகோதரரே! யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்;” (யாக்.1:19) என்கிறார். ஆம், நாமும் நம் குடும்பத்திலே நிதானத்தை கடைபிடிப்போம். பத்திரமாய் வாழ்வோம்.
-Amen

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post