பாவங்களையும் விட்டு மனம் திரும்புவோம்

பாவங்களையும் விட்டு மனம் திரும்புவோம்

சீன ராஜ இசை குழுவில் ஒரு மனிதன், சிபாரிசு வைத்து, அந்த குழுவில் சேர்ந்தான். அவன் குழல் (Flute) இசை இசைப்பவனாக அந்த குழுவில் ஒருவனாக இருந்தான். ஆனால் அவனுக்கு சிறிதளவுக்கூட குழலிசை வாசிக்க தெரியாது. பல வருடங்களாக, இசைக்குழுவினர் அரசனுக்கு முன்பாக இசை வாசிக்கும்போது, அவனும், இசை வாசிப்பவனாக, மற்றவர்களோடு சேர்ந்து வாசிப்பான். ஆனால், அவன் சிறுதளவு கூட அந்த குழலில் ஊதமாட்டான். ஏனென்றால் தான் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயத்தினால். இப்படி பல ஆண்டுகளாக செய்து வந்தான். அதனால் அவனுக்கு அரசாங்கத்தினால், நல்ல சம்பளம் கிட்டியது. அதை வைத்து தன் குடும்பத்தை நடத்தி வந்தான்.

ஒரு நாள், அரசர், தன் இசைக்குழுவினர் ஒவ்வொருவரையும் தனக்கு முன்பாக தனியே வாசிக்க வேண்டும் என்று கூறி அதற்கான நாளையும் குறித்தார். அதை கேள்விப்பட்ட அவன் கதிகலங்கி போனான். நாள் நெருங்க நெருங்க என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினான். சரி, ஒரு இசைக்கலைஞரிடம் போய் கற்றுக் கொள்ளலாம் என்றால் அவனுக்கு கடைசி நேரத்தில் சொல்லி கொடுப்பது ஒன்றும் புரியவில்லை. உடம்பு சரியில்லை என்று அவன் சொன்னால் அரசர் அனுப்பும் வைத்தியரிடமே சிகிச்சை பெற வேண்டும். அவர் கண்டுபிடித்து அரசரிடம் சொன்னால், வெட்கக்கேடு என்று அவன், அதையும் செய்ய முடியவில்லை. அரசன் முன் தோன்ற வேண்டிய அன்று காலையில், இசையை எதிர்நோக்க பயந்து, விஷம் குடித்து மரித்து போனான். இந்நாள் வரை அத்தேசத்தில் ‘இசையை எதிர்நோக்க தைரியமற்றவன்’ என்ற பழமொழி வழங்கி வருகிறது.

நம் நாட்டில் உள்ள ‘பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்ற பழமொழியைப் போன்றதுதான் அது. நாம் நம் கிரியைகளையும், நோக்கங்களையும் ஒரு சில நாட்களுக்கு மறைத்து வைக்கலாம். யார் நாம் செய்வதை பார்த்தார்கள், யார் நம் நோக்கத்தை அறிந்திருக்கிறார்கள்? என்று மறைக்கலாம், ஆனால் அது ஒரு நாள் வெளிவந்தே தீரும். அந்நாளில் அது நமக்கு வெட்கத்தை உண்டு பண்ணும். ஆனால் கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குதத்தத்தில் ‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்’ என்று நமக்கு வாக்குதத்தம் செய்திருப்பதால், நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு அவைகளை விட்டுவிடுவோம். அதனால் நாம் தேவனிடத்தில் இரக்கம் பெறுவோம்.

ஆனால் நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. அநேக நாட்களுக்கு நாம் நடித்து கொண்டிருக்க முடியாது. ஒரு நாள் கண்டுபிடிக்கப்படும்போது நம் நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிடும். சிலர், யாரும் நம்மை பார்க்கவில்லை என்று தாங்கள் வேலை செய்யும் இடத்தில் பணத்தை எடுத்து கொண்டிருப்பார்கள். அதை யாரும் கவனிக்காத வண்ணம், திறமையாக மறைத்திருப்பார்கள். ஆனால், ஒரு நாள் வெளிப்படும் நாளில் வெட்கம் ஏற்படும்.

நாம் செய்த செய்து கொண்டிருக்கிற எந்த பாவங்களையும் விட்டு மனம் திரும்புவோம், கர்த்தர் நாம் செய்கிற ஒவ்வொரு காரியங்களையும் பார்த்து கொண்டிருக்கிறார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் என்ற வசனத்தின்படி, நாம்செய்த பாவங்களுக்கு பலனாக ஆத்தும இரட்சிப்பை இழந்து போகாதபடி, தேவனிடத்தில் திரும்புவோம். அவர் நம்மை மன்னிப்பதற்கு தயை பெருத்திருக்கிறார். அவரிடத்தில் வரும் எப்பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை! 


Follow us on

Websites 
Daily bread 
https://dailybreadchristian.blogspot.com

Devotional Songs ,Sermons - 
https://perfectioninjesuschrist.blogspot.com

YouTube channel
PerfectionInJesusChrist
https://www.youtube.com/channel/UCXkjFbBM5ov_p_KHDtaQ15w

Click below link to download our dailybread app.

http://www.mediafire.com/file/xw25rfr8xbdx9c3/DailyBread_Tamil.apk

Facebook page
https://www.facebook.com/perfectionInJesusChrist/

Send your prayer requests to below mail id and we will pray for you

perfectionInjesuschrist07@gmail.com in

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post