இதோ சீக்கிரமாய் வருகிறேன்

இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.” - வெளி.22:12 

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, புதுடில்லியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைக் காண மக்கள் பெரும்திரளாய் கூடுவதுண்டு. அன்றுதான் தேசத்தின் மாபெரும் விருதுகளை ஜனாதிபதி அந்தந்த வீரர்களுக்கு வழங்கி சிறப்பிப்பார். அதில் யாரோ அறியப்படாத ஒரு ஜீனியர் வீரர் ஒரு கையை இழந்தவராய் செயற்கைக் காலோடு நொண்டி வருபவராய் அல்லது போர்க்களத்தில் ஏற்பட்ட காயங்களால் ஊனமுற்ற மனிதனாய் மேடையில் வந்து நிற்பார். அப்போது அந்த விலைமதிக்க முடியாத விருதிற்கு அவ்வீரன் தகுதிபெற்ற சாகசச் செயல்களை அங்கே வாசிப்பார்கள். கடைசியாக, முதலமைச்சர்களும் அதிகாரிகளும் சூழ்ந்திருக்கும் அந்த மேடையில், ஜனாதிபதி பதக்கத்தை வீரரின் மார்பில் அணிவிப்பார். அப்போது அங்கு கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் நம் தேசத்தின் பாதுகாப்பிற்காய் தன் உயிரையே பணயம் வைத்த அந்த வீரனுக்கு விண் அதிரும்படி ஆர்ப்பரித்து கரகோசம் செய்வார்கள். இந்த கண்கொள்ளாகாட்சி நமக்கு ஒரு காரியத்தை நினைவுபடுத்துகிறது.

ஒருநாள், நாம் பரலோக மகிமையின் நுழைவாசலில் நம் ஆண்டவரோடு சேர்ந்து நிற்கும் காட்சியே அது! இந்த பூமியிலிருந்து மீட்கப்பட்டு, உண்மையும் உத்தமுமாய் வாழ்ந்தவர்களுக்கு தூதர்கள் படைசூழ இராஜாதி ராஜாவே பரிசுகளை வழங்கிடுவார்... “ஏனோக்கு” என்ற பெயர் தொனித்தவுடனே ஏனோக்கு அந்த மகிமையில் மேடைக்குச் செல்ல, அவரைக் குறித்த காரியங்களை ஒருவர் உரத்தகுரலில் வாசிப்பார். “இந்த ஏனோக்கு தேவனை பிரியப்படுத்தினான்” என்ற வாசகமே பொங்கும் வெள்ளமாய் எழுந்துவரும். எண்ணிலடங்கா தூதர்களின் மகிழ்ச்சி கரகோஷம் விண்ணையே அதிரச்செய்துவிடும். அடுத்ததாக, அப்போஸ்தலனாகிய பவுலின் பெயர் வாசிக்கப்பட, தன் பரிசை பெறுவதற்காக முன்வருவார். இத்தனை ஆண்டுகள் அவர் பட்ட பாடுகள் அந்த வேளையில் கண்மூடித்திறப்பதற்குள் பறந்தே போய்விடும். “இவன் தேவனுக்கு உத்தமமாய் ஊழியம் செய்தான்” என்ற சாட்சி பரலோகம் முழுவதும் எதிரொலிக்கும்.

பின்பு உங்களையும் என்னையும் கூப்பிடும் வேளை வரும். அப்போது உங்களைக் குறித்து என்ன வாசிக்கப்படும்? அவர் முன்னால் நிற்கும் அவ்வேளையில் நம் வெளிவேஷம் அனைத்தும் களைந்து கீழே விழுந்துவிடுமே! அன்று உங்கள் வெறுமையைக் கண்டு துக்கம் உங்களைக் கவ்விக்கொள்ளுமோ? அல்லது... ஏனோக்கும் பவுலும் நின்ற அந்த வரிசையில் வெற்றி நடையுடன் வந்து நிற்பீர்களோ? சிந்தியுங்கள். இவைகள் நாமாக கற்பனை செய்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அல்ல! நியாயத்தீர்ப்பு நாளில் நடக்கும் உண்மை நிகழ்வு என்பதை அறியுங்கள். அந்நாளில், தேவன் நமக்கு பலமுறை வேதத்தில் எச்சரித்தபடி, அநேகர் வெட்கமடைவார்கள் என்பதும் உண்மையே! நம்நிலை?

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post