தேவனுடைய அன்பு

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” - யோவான் 3:16

அரசவையில் மந்திரி ஒருவர், வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் ராஜாவுக்கு சுவிசேஷம் அறிவித்துக்கொண்டே இருப்பார். ஒருநாள், “உலகத்தின் பாவங்களுக்காக, பிதாவானவர் தன்னுடைய ஒரே பேறான குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினார்” என்பார். இதை ராஜாவால் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. “ஏன் பிதா தன்னுடைய சொந்த குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பவேண்டும்? பரலோகத்தில் தேவதூதர்கள் இல்லையா? வேறு யாரும் இல்லையா? இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது” என்று கூறினார். “நாளை காலையில் இதற்கான விளக்கத்துடன் உங்களைச் சந்திக்க வருகிறேன்” என்று கூறி விடைபெற்றார் மந்திரி. 

மறுநாள் ராஜாவிடம், “நாம் சற்று தூரம் சேர்ந்து நடைபயிற்சி செல்வோம்” என்று மந்திரி அழைக்க, ராஜாவும் அவரது மகனும் இணைந்து நடக்க ஆரம்பித்தனர். அப்படி நடந்துகொண்டிருக்கும் போது ஒரு பாலத்தை கடக்க வேண்டியிருந்தது. பாலம் நடுவில் வந்தபோது, ராஜாவின் மகனை மந்திரி தண்ணீருக்குள் தள்ளிவிட்டார். ராஜா சற்றும் தாமதிக்காமல் உடனே தண்ணீருக்குள் குதித்து மகனைக் காப்பாற்றினார். மேலே வந்ததும் கடுங்கோபத்துடன், ”நீ செய்த இந்த காரியத்திற்கு உமக்கு மிகப்பெரிய தண்டனை தருகிறேன்” என்றார். உடனே மந்திரி, “ராஜாவே நான் கூறும் காரியத்தை ஒரு நிமிடம் கேளுங்கள். அப்புறம் நீங்கள் தரும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

“உங்களுக்கு பாதுகாப்பு தரவும், உதவி செய்யவும் 50 படைவீரர்கள் சூழ்ந்து வருகின்றனர். நானும் உங்கள் அருகாமையிலேயே உள்ளேன். நீங்கள் கட்டளையிட்டிருந்தால் நாங்கள் குதித்து வருங்கால ராஜாவை காப்பாற்றியிருப்போமே” என்றார். அதற்கு ராஜா, “விழுந்தது என் மகன் அல்லவா? உங்களை விட நானே அவனை அதிகமாய் நேசிக்கிறேன். எனக்கு உயிரான என் ஒரே அன்பு மகனை நானே காப்பாற்ற குதித்துவிட்டேன்” என்றார். 

பிரியமானவர்களே! இதேபோல் தான் பிதாவானவரும் நம்மை காப்பாற்றுவதற்காக தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பினார். இதினால் தேவனுடைய அன்பு இன்னதென்று அறிந்துகொள்கிறோம். நாம் கெட்டுப்போவது அவர் விருப்பமல்ல. ஆம், தேவன் நம்மேல் வைத்த அளவில்லாத அன்பு வெளிப்பட்ட நாளே கிறிஸ்மஸ்! பாவத்தில் மாண்ட நம்மை மீட்க தேவதூதரையோ, எலியா, எலிசா போன்ற தீர்க்கதரிசிகளையோ அனுப்பியிருக்கலாமே! ஆனால் நம் மேல் வைத்த அன்பினால் தன் சொந்த குமாரனை பூமிக்கு அனுப்பி பாடுபட ஒப்புக்கொடுத்தாரே! ஆ! எத்தனை பெரிய அன்பு! இந்த அன்புக்கு ஈடாய் நாம் என்ன செய்ய முடியும்?

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post