கிறிஸ்தவ பெற்றோரே! உங்கள் பிள்ளையைக் குறித்து உங்கள் கனவு என்ன?

கிறிஸ்தவ பெற்றோரே! உங்கள் பிள்ளையைக் குறித்து உங்கள் கனவு என்ன?

“நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து,… அவைகளைக் குறித்துப் பேசி,… உன் வாசல்களிலும் எழுதுவாயாக.” - உபாகமம் 6:7,9 

கிறிஸ்துவின் அன்பை இந்தியாவிற்கு கொண்டுவந்த முக்கியமான மிஷனெரிகளில் ஒருவர் ஏமி கார்மைக்கேல். அயர்லாந்து தேசத்தில் பிறந்த இவர், வாலிப பிரயாயத்தில் பல ஊழியங்களை செய்து கொண்டிருந்தாலும், சுவிசேஷம் அறிவிக்கப்படாத தேசங்களின் மேல் பாரம் கொண்டு இந்தியா வந்தார். தென் தமிழகத்திலுள்ள டோனாவூர் என்ற இடத்திற்கு வந்து தங்கி தேவதாசி என்கிற கொடிய கலாச்சாரத்தின் கீழ் சிக்கிக் கிடந்த பெண்பிள்ளைகளை மீட்டு அவர்களை ஆதரித்தார். மேலும் ஆதரவற்ற சிறுவர்களுக்கென்று நட்சத்திரக்கூட்டம் என்ற இல்லத்தையும் அமைத்து, அநேக எதிர்ப்புகளின் மத்தியிலும் வல்லமையாய் ஊழியம் செய்தார். ஒருமுறை கூட சொந்த தேசத்திற்கு விடுப்பு எடுத்து செல்லாமல் தனது 83வது வயதில் 1951ம் ஆண்டு இதே நாளில் டோனாவூரிலேயே மரித்தார். 

வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்து சுகமான ஒரு சூழ்நிலையில் வளர்ந்த ஒரு நபர் எப்படி இப்படிப்பட்ட ஒரு தியாகத்தோடு வந்து மிஷனெரி பணி செய்யமுடிந்தது? ஏமியின் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது அதற்கு ஒரு முக்கிய காரணமாக அவரின் பெற்றோரைக் கூறலாம். கர்த்தரையும் அவர் வார்த்தையையும் அதிகமாய் நேசித்த அவர்கள், அதை தங்கள் பிள்ளைகளுக்கு கடத்துவதில் கருத்தாயிருந்தார்கள். வேத வசனத்தின் பின்னணியும், பெற்றோரின் வளர்ப்பும் ஏமியை மற்றவர்கள் மேல் கரிசனையுள்ளவளாக வளர்த்தது. ஒருநாள் ஏமி தன் அம்மா கேத்தரினுடன் மழை பெய்யும் ஒரு நாளில் சிற்றுண்டி கடையில் அமர்ந்திருந்தாள். அந்நேரத்தில் கடைக்கு வெளியே ஒரு சிறுமி நனைந்த உடலோடு, கிழிந்த ஆடையோடும் கண்ணாடி பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த திண்பண்டங்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த காட்சி ஏமியின் மனதை மிகவும் பாதித்தது. ஏமி வீட்டிற்கு சென்றவுடன் ஒரு பேப்பரையும் பென்சிலையும் எடுத்து “நான் பெரியவளாய் வளர்ந்த பிறகு என் கையில் பணம் வரும்போது என்ன செய்வேன் தெரியுமா? உன்னைப் போன்ற ஏழை சிறுமிகளுக்கு அழகிய, பெரிய இன்பமான வீடு ஒன்றை கட்டுவேன்” என எழுதினாள். இந்த அவளுடைய கருணை மிக்க ஆசையை ஆண்டவர் நிறைவேற்றினார். டோனாவூரிலுள்ள “நட்சத்திர கூட்டம்” என்ற சிறுவர் இல்லத்திற்கே தாயானாள். இதற்கு அவரது பெற்றோரின் வளர்ப்பும் காரணமென்றே சொல்ல வேண்டும்.

கிறிஸ்தவ பெற்றோரே! உங்கள் பிள்ளையைக் குறித்து உங்கள் கனவு என்ன? பேச நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் எதைப்பற்றி பேசுகிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வசனத்தை உட்காரும்போதும், எழும்பும்போதும், படுத்திருக்கும்போதும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று கட்டளையிட்டார் தேவன். இதுதான் நம் பிள்ளைகளுக்கு மிகமிக பிரதான தேவை. வேதத்தை கற்றுக்கொடுப்போம். முன்னணி மிஷனெரிகளின் வாழ்வை குறித்து சொல்லுவோம். ஏமி மறைந்தாலும் டோனாவூரில் அவர் துவக்கிய ஊழியம் இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது. உங்கள் பிள்ளைகளை அங்கு அழைத்துச் சென்று காண்பியுங்கள். அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமான ஒரு ஏமி உங்கள் குடும்பத்திலும்  உருவாகலாமே!

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post