ஊழியம் என்றால் கனம் உண்டு. ஆனால் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என ஆதங்கப்படுகிறீர்களா

ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.” – 2தீமோ 2:20

வானுயுயர்ந்த பெரிய கட்டிடங்களின் வெளிப்பகுதியை பார்க்கும் நமக்கு, அதைத் தாங்கியுள்ள அஸ்திபாரங்கள் தெரிவதில்லை. பெரியதாய் வளர்ந்த ஒரு மரத்தைப் பார்க்கும்பொழுது அதின் வேர்கள் பூமிக்கடியில் மறைந்திருந்து தாங்கிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிவதில்லை. இதைப்போன்று நன்றாய் அறியப்பட்டிருக்கும் பிரபலங்களுக்குப் பின்னால் இருப்பவைகளை நம்மால் அறிய முடியாமல் போகிறது. இன்றைக்கு சபையானாலும், ஊழியங்களானாலும் சரி பிரபலமாயிருப்பதையே எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் நம் தேவன் எல்லோரையும் அப்படி அனுமதிப்பதில்லை. மாறாக ஒருசிலரை எல்லோர் அறியும்படியாகவும் வேறு சிலரை யாருக்கும் அறியப்படாதவர்களாயும் மறைவாக வைத்து வழிநடத்துகிறார். இதை சரியாய் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்போது வாழ்க்கை சமாதானமுள்ளதாக இருக்கும்.

பல நிருபங்களை எழுதி சபைகளை ஸ்தாபித்த பவுலை எல்லோருக்கும் நன்கு தெரியும். ஆனால் பவுலுக்கு உதவியாயிருந்த ஆக்கில்லா- பிரிஸ்கில்லாவை அறிந்தோர் அநேகரில்லை. நவீன கால மிஷனெரி இயக்கங்களின் தந்தை என அழைக்கப்படும் வில்லியம் கேரியைப் பற்றி அறிந்த நாம், அவரை இந்தியாவிற்கு மிஷனெரியாகச் செல்ல அகத்தூண்டுதல் கொடுத்தவர் யார் என்பதை அறியோம். சீன தேசத்திற்கு மிஷனெரியாகச் சென்ற ஹட்ஸன் டெய்லரை வழிநடத்தியவர் ஹேஸ்டே என்பதும் நாமறியோம். இதைப்போன்று தேவனுக்காக மறைந்திருந்து செயல்பட்டவர்கள் ஏராளம் உண்டு. லுத்தர், ஜிம் எலியட், டேவிட் லிவிங்ஸ்டன் போன்றோர் இலட்சக்கணக்கான மக்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கு இவர்கள் பின்னிருந்து செயல்பட்ட அருமையானவர்களை நம் கிறிஸ்தவ உலகம் அறிந்ததில்லை.

ஊழியம் என்றால் கனம் உண்டு. ஆனால் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லையே என ஆதங்கப்படுகிறீர்களா? சோர்ந்து போய் விடவேண்டாம். இப்பூமியில் மனுஷரால் ஏற்படும் மேன்மையையும், மகிமையையும் பார்க்கிலும் பரலோகத்தில் சர்வ சபையின் மத்தியில் நம் எஜமானர் இயேசு ராஜா உங்களைக் கனப்படுத்த ஆயத்தமாய் காத்திருக்கிறார். சிரசில் கிரீடம் வைக்கப்பட்டவர்களாய், “நல்லது உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, உன் எஜமானனுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்ற சத்தத்தை கேட்கும் நாட்கள் வெகு அருகில் உள்ளது. மறக்கப்பட்டவர்கள், அறியப்படாதவர்கள் மகிமையில் மறுரூபமாகி ஜொலிப்பார்கள். ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post