பயணம்

அராபிய வணிகன் ஒருவன் தனது ஆட்களுடன் கப்பலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அதில் ஒரு இளைஞன் முதன்முறையாக கடலில் பயணம் செய்கிறான். 

அவன் பயணம் புறப்பட்டதில் இருந்து ‘அய்யோ… நாம் கப்பல் கடலில் மூழ்கிப்போய்விடப் போகிறோம். கடற்பூதம் நம்மைப் பிடித்துக் கொள்ளப்போகிறது. நாம் கடலில் மூழ்கி செத்துப்போய்விடப் போகிறோம்…’ என்று கத்திக்கொண்டே இருந்தான்.

இவனால் கப்பலில் இருந்த மற்றவர்களும் பயப்பட ஆரம்பித்தார்கள்.
கப்பல் உறுதியானது. கடற்பூதம் என்று ஒன்றுமே இல்லை. கடலில் எதுவும் நடந்துவிடாது. நீ தேவையில்லாமல் பயப்படாதே…’’ என்று மாலுமி சொன்னபோதும், அவன் கத்துவதை நிறுத்தவே இல்லை.
எப்படியும் கடற்பூதம் நம்மைப் பிடிக்கப் போகிறது, நாம் கடலில் மூழ்கிச் சாகப்போகிறோம்’ என்று புலம்பிக் கொண்டேயிருந்தான் அவன். இது பெரிய தொந்தரவாக மாறியது,

‘இவனை எப்படி சமாதானம் செய்வது?’ என்று ஒருவருக்கும் தெரியவில்லை.
அப்போது கப்பல் மருத்துவர் ‘இதற்கு ஒரு வைத்தியம் இருக்கிறது…’ என்று மாலுமியிடம் சொன்னார்.

‘‘எதையாவது செய்து அவன் பயத்தைப் போக்குங்கள் என்றார் மாலுமி. உடனே அந்த இளைஞனைத் தூக்கி கடலில் வீசும்படி மருத்துவர் கட்டளையிட்டார்.
மறுநிமிடம் காவல் வீரர்கள் அவனைத் தூக்கி கடலில் போட்டார்கள். அந்த இளைஞன் அலைகளுக்குள் நீந்த முடியாமல் திக்குமுக்காடினான். 
அவன் கடலினுள் மூழ்கப்போகும் நேரம் காவலாளிகள் குதித்து, அவனை மீட்டு கப்பலுக்குக் கொண்டு வந்தார்கள்
உயிர் பிழைத்தவன் அதன்பிறகு வாயைத் திறக்கவே இல்லை.
மாலுமி ஆச்சர்யமடைந்து , ‘‘இது எப்படி சாத்தியமானது..?’’ என்று கேட்டார்.
அதற்கு அந்த மருத்துவர் ‘‘இந்த இளைஞனுக்கு கடலில் மூழ்கிப் போவது என்றால் என்னவென்று தெரியவில்லை, ஆகவே கப்பல் தரும் பாதுகாப்பை அவன் உணரவில்லை. 

ஆபத்தை அனுபவித்தவனே, பாதுகாப்பு என்பதை நன்றாக அறிவான்.
நாம் வரப்போவதைப் பற்றி நினைத்து பயப்படுவதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை, 
எதையும் தைரியமாக எதிர் கொண்டால் ஆபத்திலும் கூட நாம் வெற்றி பெற முடியும் என்றார்.
என்றோ ஒரு கதையில் அரபு வணிகர்களுக்குச் சொல்லப் பட்ட இந்த வழிகாட்டுதல், இன்றைய தலைமுறைக்கும் பொருந்தக்கூடியதே.

உலகின் ஏதோவொரு கோடியில் இருந்து 80 வயதில் ஒருவர் கன்னியாகுமரியைப் பார்க்க வந்து நிற்கிறாரே, அந்த வெள்ளைக்காரருக்கு இருக்கும் தைரியம் ஏன் நமக்கு இல்லை? 
சைக்கிளிலேயே உலகம் சுற்றிவருகிறாரே ஒரு இளைஞர் அவருக்கும் வயது 25-தானே! கண் தெரியாமல் இமயமலை மீது ஏறி சாதனை செய்தவருக்கு இவ்வளவு கேள்விகள்… பயம் இருந்திருக்குமா?

நம்மில் பலரும் பயணம் செய்வதற்கு தயங்குகிறோம், பயப்படுகிறோம். ஏதாவது வசதி குறைவாக கிடைத்துவிட்டால் புலம்புகிறோம். 
மாறுபட்ட அனுபவத்தைத் தருவதே பயணம் என ஒருவருக்கும் புரிவதில்லை. 
எதிலும் தனது சௌகரியத்தை மட்டுமே எதிர்பார்த்தால் வீட்டை விட்டு வெளியே செல்லவே முடியாது... 
ஒவ்வொரு பயணத்திலும் எதாவது ஒரு பாடத்தை கற்றுக் கொள்கிறோம்..
சில நேரங்களில் பலருக்கும் அவர்களது வாழ்ககை பயணம் அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. மேடு பள்ளங்கள் தடைகள் பல கடந்து சாதித்தவர்கள் பலர் உள்ளனர்..

ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது பயமும் குழப்பமும் இருக்கவே கூடாது..
மன உறுதியும் விடா முயற்சியும் மூழகடிக்கப்பட்ட கப்பலில் இருந்து கூட வெளியே மீண்டு வர வழிவகுக்கும்..

தேவனுக்கே மகிமை உண்டாவதாக !
ஆமென்

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post