Worldly sin

ஒரு செல்வந்தர் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது பரிதாபகரமான நிலையில் இருந்த ஒரு இளைஞன் அவரது கண்ணில் பட்டான். 
இரண்டு சாலைகளுக்கு மத்தியில் , அபாயகரமான பிரிவு மேடையில் அவன் படுத்திருந்தான். உடலெங்கும் ஈக்கள் மொய்த்துக் கிடந்தன . மொய்க்கிற ஈக்களைக் கூட விரட்டத்திராணியில்லாமல் பலவீனமாய்க் கைகளை வீசிக்கொண்டிருந்தான் . 
அவனது நிலையைப் பார்த்து அவர் மனதுருகினார் . அவனுக்குத் தன்னிடம் இருந்த பழங்களையும் , தண்ணீரையும் புகட்டினார் . இப்போது அவன் கொஞ்சம் திடன் கொண்டு எழும்பி அமர்ந்தான் . அவனிடம் கேட்டார் ,
" என் மகனே ! என்னோடு என் வீட்டுக்கு வருகிறாயா ? " .
அவன் அந்த வார்த்தையை எதிர்பார்த்திருக்கவில்லை . 
" எத்தனை பெரிய மனிதர் , யாருமே சீண்டாமல் குப்பையாய் எறியப்பட்ட என்னையும் மதித்து அழைக்கிறாரே ! "
என்று அவனுக்கு வியப்பும் , அழுகையும் பெருகிற்று . கண்ணீரோடு கைகூப்பி சம்மதம் தெரிவித்தான் . 
அவர் அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று , தன் வேலையாட்களைக் கொண்டு அவனைக் குளிப்பாட்டிக் , காயங்களுக்கு மருந்திட்டுப் , புதிய ஆடைகளை உடுத்துவித்தார் . இதுவரை இப்படி ஒரு சவுகரியத்தை அனுபவித்திராத அந்த இளைஞன் நன்றியுடன் அவர் பாதத்தில் விழுந்து அழுதான் .
அவர் சொன்னார் ,
" மகனே ! இந்த வீட்டில் பல அறைகள் உண்டு . ஒரு அறையில் நான் தங்கிக் கொள்ளுகிறேன் . மீதமுள்ள அறைகளில் இரண்டு , மூன்று அறைகளில் பணியாளர்கள் தங்கிக் கொள்ளுவார்கள் . இதற்கு மேலும் சில இருக்கும் . அவற்றைத் தேவைக்குத் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளலாம் . இன்று முதல் இது உன்னுடைய வீடு . உனக்கு வேண்டிய எல்லா வசதிகளும் கிடைக்கும் . சமாதானத்தோடு தங்கி
இரு " என்றார் . 
* * * *
வந்த ஒரு வாரத்திலேயே இளைஞன் காயங்களெல்லாம் ஆறி , நிறமும் சற்று வெளுத்து செழிப்புடன் காணப்பட்டான் . முகத்தில் ஒரு தெளிவு தென்பட்டது . வீடு முழுவதும் தயக்கமின்றி நடந்துபோக ஆரம்பித்தான். 
ஒரு நாளில் பல மணி நேரங்களை செல்வந்தரை சந்தித்து அவருக்கு நன்றி சொல்வதற்கே செலவிட்டான் . தன்னுடைய கேவலமான கடந்தகால வாழ்க்கை நினைவுக்கு வரும்போதெல்லாம் கண்ணீரோடு அவரை நினைத்து நன்றியுடன் வணங்கினான் . 
நாட்கள் ஓடின. அவனுடைய தோற்றமும் ஒரு பணக்கார வீட்டுப் பிள்ளை போலவே மாறிவிட்டது . வேலைக்காரர்களும் அவனது சொற்படியே நடந்தார்கள் .
* * * *
சில மாதங்கள் கழிந்தன . செல்வந்தர் ஒரு அலுவல் காரணமாக வெளிநாட்டுக்கு செல்லவேண்டி வந்தது . 
பல மாதங்களுக்கு அங்கே வேலைகள் இருந்ததால் அவனை அழைத்துக் கைநிறைய செலவுக்குப் பணம் கொடுத்து ,
" வீட்டையும் , பணியாட்களையும் பார்த்துக்கொள். என்னையும் அவ்வப்போது நினைத்துக்கொள் " என்று கூறிப் புறப்பட்டார் . 
அவனும் பதிலுக்கு ,
" ஐயா , இத்தனை கவுரவமான வாழ்க்கையைக் கொடுத்த உங்களை நான் மறப்பதென்றால் அது இந்த உடலில் உயிர் இல்லாதபோதுதான் " என்று சொல்லிக் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்தான் . 
" நான் இல்லாத நேரத்தில் என் அறையில் இருக்கும் பொருட்களையெல்லாம் சுத்தமாகப் பார்த்துக்கொள் " என்று சொல்லி அவர் கிளம்பினார் . 
* * * *
அவர் போய் சில நாட்களாகி விட்டன. பலமணி நேரம் அவரது அறையில் இருப்பதும் , அவர் பயன்படுத்திய பொருட்களைப் பார்ப்பதும் அவனுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . சில நாட்களுக்குப்பின் இளைஞனுக்கு வீட்டில் இருக்க அலுப்புத்தட்டியது . கையில் இருந்த காசும் செலவாகமலேயே இருந்தது . 
" சரி. கொஞ்சம் வெளியே போய் வருவோம் " என்று வெளியில் வந்தான். 
எங்கெல்லாம் அவன் துரத்தி அடிக்கப்பட்டானோ அங்கெல்லாம் அவனுக்கு நல்ல மரியாதை கிடைத்தது . தனக்கு இவ்வளவு செல்வாக்கு வருவதற்குக் காரணமாயிருந்த பெரியவரை நன்றியுடன் நினைத்துக் கொண்டான் . 
கையில் பணமிருந்தால் எந்த அளவுக்கு மரியாதையும் , சந்தோஷமும் கிடைக்கும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்தான் . ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்தபடியே ஒரு கடையில் 
 ' தொலைக்காட்சி 'என்று ஒருவனை சந்தித்தான் . பார்த்த உடனே அவனைப் பிடித்துப் போயிற்று . விளையாட்டு , நாட்டு நடப்பு என்று அவன் காட்டிய விதவிதமான காரியங்களில் மயங்கி அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றான் . 
வீட்டில் மீதமிருந்த அறைகளில் ஒன்றை அவனுக்குக் கொடுத்தான் . இதைப் பார்த்த ஒரு மூத்த பணியாளர் சொன்னார் ,
" தம்பி , இவனைக் கட்டுப்பாட்டில்  வைத்திருந்தால் இவன் நல்ல வேலைக்காரன் . அதிகமாய் இவனோடு நேரத்தை செலவிட்டீர்களென்றால் இவன் ஒரு மோசமான எஜமான் ஆகிவிடுவான் . ஜாக்கிரதை " என்றார் . 
தொலைக்காட்சி உண்மையிலேயே ஒரு நல்ல நண்பனைப் போலத்தான் நடந்துகொண்டான். அவனிடம் பழகப் பழகத்தான் தெரிந்தது , அவனிடம் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பது. அவனுடன் இருக்கும்போது நேரம் போவதே தெரியவில்லை . 
மற்றுமொரு நாள் வெளியே சென்றபோது ' கைப்பேசி ' என்ற ஒருவனை சந்தித்து அவனுடைய திறமைகளில் கவரப்பட்டான் வீட்டுக்கு அவனையும் கொண்டுவந்து , ஒரு அறையில் தங்க வைத்தான். 
பணியாளர் மீண்டும் எச்சரித்தார் ,
" தம்பி இவன் ஒரு திருடன் . பலரது வாழ்க்கையைத் திருடியிருக்கிறான் . இவனை ஒரு நாயைப் போலக் கட்டிப்போட்டு வையுங்கள். தேவைப்படும்போது மட்டும் அவிழ்த்து விடுங்கள் " 
தொலைக்காட்சியை விடக் கைப்பேசி பலே ஆளாக இருந்தான் . அவன் மூலமாக , இருந்த இடத்திலிருந்தே பலரைத் தொடர்பு கொண்டு பேச முடிந்தது . அவனுடைய நட்பு உண்மையிலே இளைஞனுக்கு சந்தோஷமாக இருந்தது . சில நாட்களிலேயே கைப்பேசி அவனுக்கு இணைபிரியாத நண்பனாகி விட்டான். 
ஒரு நாள் கைப்பேசி கேட்டான் ,
" நண்பா , எனக்கு இன்னும் சில சுவாரஸ்யமான நண்பர்கள் உண்டு . அவர்களுக்கும் இந்த வீட்டில் இடம் கொடுப்பாயா ? " . இளைஞன் உடனே ,
" இப்போது ஓரிரு அறைகள் மட்டுமே மீதமுள்ளன. வேண்டுமானால் ஒருவனை மட்டும் வரச்சொல் . பழகிப் பார்க்கலாம் " என்றான் . 
உடனே அவன் ' இணையதளம் ' என்ற நண்பனைக் கொண்டு வந்தான் . அவனுடைய செயல்பாடுகள் இளைஞனைத் திறந்த வாய் மூடவிடாமல் செய்துவிட்டது . உலகத்தில் எந்த மூலையில் எது நடந்தாலும் அவன் உடனே சொன்னான் . எந்தக் கேள்வி கேட்டாலும் அவனிடம் பதில் இருந்தது . 
இளைஞன் இப்போது அவனுக்கு அடிமையாகி விட்டான் .
' இணைய தளம் ' அவனுக்குத் தன்னுடைய நண்பர்களான செயலிகள் , அரட்டை , ஆபாசம் , மறைமுகப் பாவங்கள் , நேரில் காணக்கிடைக்காத வன்முறைக்காட்சிகள் , தகாத உறவு முறைகள் போன்ற பல நண்பர்களை அறிமுகப்படுத்தினான் . இப்போது இளைஞன் தானாகவே முன்வந்து அந்த நண்பர்களையும் வீட்டில் தங்க வைத்தான் . இப்போது இடம் போதவில்லை . உடனே பணியாளர்கள் அறையைக் காலி செய்து அவர்களை அந்த அறைகளில் தங்க வைத்துவிட்டுப் , பணியாளர்களை வீட்டுக்கு வெளியே தள்ளினான். 
ஓரிரு நாட்களில் அந்த நண்பர்கள் மூலமாக இன்னும் பல நண்பர்கள் அறிமுகமானார்கள் . இப்போது வீட்டில் மீதமிருந்த அறை முதலாளியின் அறை மட்டுமே .
" சரி , தற்சமயத்துக்கு அவர்களை இந்த அறையில் தங்க வைத்துவிட்டு , அவர் வரும்போது வேறு ஏற்பாடு செய்துகொள்ளலாம் " என்று அவர்களை அங்கே தங்கவைத்தான். 
அவர்கள் மூலமாக இன்னும் நண்பர்கள் அதிகமாகவே இட நெருக்கடி காரணமாக முதலாளியின் அறையில் இருந்த பொருட்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வீட்டுக்கு வெளியே வைத்து விட்டான் . இப்போது வீடு முழுக்கக் கூச்சலும் , களியாட்டமும் நிரம்பி இருந்தது. 

ஒரு நாள் முதலாளி திரும்பி வந்தார் . தம்முடைய பணியாளர்களும் , பொருட்களும் வெளியே கிடப்பதைக் கண்டு மிகுந்த வேதனையடைந்தார் . பணியாளர்கள் கேட்டார்கள் ,
" ஐயா , நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள் . கதவை உடைத்து உள்ளே சென்று அந்த துரோகியையும் , அவனது நண்பர்களையும் தூக்கி வெளியே வீசிவிடுகிறோம் " என்றனர்.
அதற்கு அவர் சொன்னார் ,
" அவசரம் வேண்டாம் . நான் சிறிது நேரம் கதவைத் தட்டிப் பார்க்கிறேன். சத்தம் கேட்டு அவன் வெளியில் வருவான் " என்றபடி அவனை அழைத்தபடியே கதவைத் தட்டத் துவங்கினார் . வீட்டுக்குள் அவனது நண்பர்கள் போட்ட கூச்சலில் அவரது சத்தம் அவன் காதில் விழவே இல்லை. எப்போதாவது அவனுக்கு உணர்வு வந்து தம்முடைய சத்தத்தைக் கேட்டு கதவைத் திறப்பானென்று அவரும் நம்பிக்கையோடு தட்டிக் கொண்டே இருக்கிறார் .
கர்த்தர் கொடுத்த வாழ்க்கையில் ஒவ்வொரு வசதிகளும் பெருகப் பெருகக் கடைசியில் அவரையே வெளியே தள்ளிக் கதவை சாத்திவிடுகிறோம் . ஒவ்வொரு கேளிக்கையும் நம்முடைய நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ள , அவரோடு செலவழிக்க வேண்டிய நேரத்தையும் அவற்றுக்கே கொடுத்து விடுகிறோம் . இருந்தாலும் 
" அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை 
செய்கிறார்" .(லூக்கா 6 : 35)
இனியேனும் அவற்றை ஒதுக்கிவிட்டு அவரோடு செலவிடும் நேரத்தைப் பெருக்கிக் கொள்ளுவோமா ?

" தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான் " .

நீதிமொழிகள் 14 : 2

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post